ரஞ்சி கோப்பை 2025: விதர்பாவின் படுதோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட தமிழ்நாடு!

Updated: Tue, Feb 11 2025 19:46 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இத்தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 122 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மாலேவார் 75 ரன்களையும், ஹர்ஷ் தூபே 69 ரன்களையும் சேர்த்து அணியை சரிலிருந்து மீட்டனர். இதன்மூலம், விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்ஹ்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷ் தாக்ரே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் 128 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய விதர்பா அணியில் தொடக்க வீரர்கள் அதர்வா டைடே 19 ரன்களுக்கும், துருவ் ஷோரே 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய டேனிஷ் மலேவார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயரும் 29 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் ஆகாஷ் வத்கரும் 8 ரன்களுடன் நடைடைக் கட்டினார்.  இதன்மூலம் விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் யாஷ் ரத்தோட் 55 ரன்களுடனும், ஹர்ஷ் தூபே 29 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ் ரத்தோட் சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஹர்ஷ் தூபே 64 ரன்களையும் சேர்க்க அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தமிழ்நாடு அணிக்கு 400 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. 

இதனையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணியில் முகமது அலி 10, ஜெகதீசன் 18, சாய் சுதர்ஷன் 2, விஜய் சங்கர் 5, பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரே சித்தார்த் 15 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால் - சோனு யாதவ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ரஞ்சன் பால் 53 ரன்களிலும், சோனு யாதவ் 57 ரன்களிலும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சாய் கிஷோர், முகமது ஆகியோரும் சோபிக்க தவறினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் தம்ழிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் ஹர்ஷ் தூபே மற்றும் நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய கருண் நாயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை