ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!

Updated: Tue, Feb 11 2025 21:57 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 315 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக தனூஷ் கோட்டியான் 97 ரன்களையும், ஷம்ஸ் முலானி 91 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹரியானா அணிக்கு கேப்டன் அங்கித் குமார் சதமடித்து அசத்தியதுடன் 136 ரன்களைக் குவித்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி முதல் இன்னிங்ஸில் 301 ர்னகளை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

அதன்பின் 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார். இதில் அவர் 108 ரன்களைச் சேர்க்க, அவருடன் இணைந்து விளையாடிய சூர்யகுமார் யாதவ் 70 ரன்களை அடித்தார். மேற்கொண்டு சோனு லத் 43 ரன்களையும், ஷிவம் தூபே 48 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 339 ரன்களைச் சேர்த்ததுடன், ஹரியானா அணிக்கு 345 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஹரியானா அணிக்கு தொடக்க வீரர் லக்ஷ்யா தலால் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில். மறுமுனையில் காளமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த லக்ஷ்யா தலால் மற்றும் சுமித் குமார் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 64 ரன்கள் எடுத்த நிலையில் லக்ஷ்யா தலால் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுமித் குமாரும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 201 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராய்ஸ்டன் டயஸ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை