நிலநடுக்கதினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது சம்பளத்தை வழங்கிய ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க மீட்புப் படையினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர், முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில், '13 கிராமங்களில் 2,053 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். 1,240 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 1,320 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விட்டது” என்று கூறியுள்ளார்.
இச்சூழலில் பல்வேறு தரப்பும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஷீத் கான், உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் தனது சமூக வலைதளப்பதிவில், “ஆஃப்கானிஸ்தான் மேற்கு மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்தின் துயரமான விளைவுகளைப் பற்றி நான் மிகுந்த சோகத்துடன் கேள்விபட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது உலகக்கோப்பை போட்டிக் கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன்.
விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷித் கானின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளபக்கங்களில் தற்போது பாராட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.