அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை!

Updated: Mon, Nov 13 2023 14:25 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய 9 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்து தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அசத்தியுள்ளது. குறிப்பாக நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ராகுல் 102, ஸ்ரேயாஸ் ஐயர் 128 எடுத்த உதவியுடன் 411 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதை துரத்திய நெதர்லாந்து தங்களால் முடிந்தளவுக்கு போராடியும் 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் வெளியேறியது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இந்த வெற்றியில் அனைவரும் முக்கிய பங்காற்றிய நிலையில் சுழலில் வழக்கம் போல மிகச்சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 9 ஓவரில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்திய அவர் இதுவரை 9 போட்டிகளில் மொத்தம் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம்  உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட மற்றும் யுவராஜ் சிங்கின் 12 வருட சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். 

  • ரவீந்திர ஜடேஜா : 16* (2023)
  • அனில் கும்ப்ளே : 15 (1996)
  • யுவராஜ் சிங் : 15 (2011)
  • குல்தீப் யாதவ் : 14 (2023)
  • மணிந்தர் சிங் : 14 (1987)

அந்த வகையில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 2 முதன்மை ஸ்பின்னர்களும் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியா அணி நவம்பர் 19ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை