இரானி கோப்பை: மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது ரெஸ்ட் ஆஃப் இந்தியா!

Updated: Sun, Mar 05 2023 15:57 IST
Rest of India on winning the Irani Cup for the 30th time! (Image Source: Google)

ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் விளையாடி 2ஆவது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய மத்திய பிரதேச அணி, யஷ் துபேவின் சதத்தால்(109) 294 ரன்கள் அடித்தது. மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யாததால் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 190 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்களை குவிக்க, 2ஆவது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 246 ரன்கள் அடித்தது. மொத்தமாக 436 ரன்கள் முன்னிலை பெற, மத்திய பிரதேச அணி 437 ரன்கள் என்ற கடின இலக்கை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த மத்திய பிரதேச அணியில் அதிகபட்சமாக ஹிமான்ஷு 51 ரன்களையும், ஹார்ஷ் கௌலி 48 ரன்களையும், அமான் சோலங்கி 31 ரன்களையும் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினர். 

இதனால் மத்திய பிரதேச அணி 198 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. எதிரணி தரப்பில் சௌரப் குமார் 3 விக்கெட்டுகளையும், அடிட் சேத், முகேஷ் குமார், புல்கிட் நரங்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம்(213) மற்றும் 2ஆவது இன்னிங்சில் சதமடித்ததன் (144) மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும், இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை