ரிங்கு சிங் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் - ரோஹித் சர்மா!

Updated: Thu, Jan 18 2024 12:23 IST
ரிங்கு சிங் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் - ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி பரபரப்பான இரண்டு சூப்பர் ஓவர்களின் முடிவில் வெற்றி பெற்று இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

இதன்காரணமாக இப்போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. சூப்பர் ஓவரும் சமனில் முடியவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இதேபோன்று கடைசியாக எப்பொழுது நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. 

ஐபிஎல் தொடரில் ஒரு முறை நான் இதே போன்று ஒரே ஆட்டத்தில் மூன்று முறை பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளேன். ஆனால் சர்வதேச அளவில் இதுதான் முதல் முறை. இந்த போட்டியில் ஆரம்ப கட்டத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ரிங்கு சிங்குடன் சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தேன். அந்த வகையில் ரிங்கு சிங்கிடம் எந்த இடத்திலும் இன்டன்டை விட வேண்டாம். எந்த அளவிற்கு போட்டியை முடிந்தவரை இறுதிவரைக்கும் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு செல்வோம். 

அதே வேளையில் இன்டன்ட்டையும் விட்டுவிடக்கூடாது என்றும் கூறினேன். அவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். ரிங்கு சிங் கடந்த இரண்டு தொடர்களாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பது நமக்கு தெரியும். அதையே தற்போது இந்திய அணிக்காகவும் அவர் பின் வரிசையில் களமிறங்கி செய்து வருகிறார்” என பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை