இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!

Updated: Sat, Jan 20 2024 12:46 IST
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்! (Image Source: Google)

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.

இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வு குழு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனிடையே தேர்வு குழு தரப்பில் ரஞ்சி கோப்பை தொடரில் இஷான் கிஷனை விளையாட வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட இஷான் கிஷன் விரும்பவில்லை என்று தகவல் வெளி வந்தது. இதனால் இஷான் கிஷனை தேர்வு செய்யாமல் பிசிசிஐ ஓரங்கட்டுவதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே 4 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி 24 முதல் 27 வரை 3ஆவது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 1 முதல் 4 வரை 4ஆவது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது.

இதற்கான இந்தியா ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஃபார்மில் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் கடைசி டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்திய டி20 அணியில் அசத்தி வரும் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக இந்திய ஏ அணி விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்தால், இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் மனசோர்வை காரணம் காட்டி அணியில் இருந்து விலகிய இஷான் கிஷன், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். தற்போது இந்திய ஏ அணி விளையாடி வரும் டெஸ்ட் தொடரிலும் தேர்வு செய்யப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, ரிங்கு சிங், குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், ஷம்ஸ் முலானி, அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, உபேந்திர யாதவ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை