அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!

Updated: Fri, Jul 07 2023 14:14 IST
Rinku Singh, Ruturaj and other youngsters will be flown for India’s T20I series against Ireland! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் டி20 தொடரில் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 450 ரன்களுக்கு மேலாக ரன்கள் சேர்த்தும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

முதல் முறையாக செய்யப்பட்ட அணித் தேர்விலேயே அஜித் அகர்கர் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து வீரர்களையும் ஒரே தொடரில் களமிறக்க தேர்வுக் குழுவினர் விரும்பவில்லை. இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் 7 வீரர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடப் போவதில்லை.

ஆசியக் கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், அவர்கள் முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள். அதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அதேபோல் இந்திய ஏ அணிக்கான சுற்றுப்பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சில சிறந்த வீரர்கள் சீனியர் அணியில் விளையாடுவதற்கு முன் இந்திய ஏ அணியில் இடம்பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை