ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் ரியான் பராக். அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஒரே வீரரும் அவர் தான். இதன் காரணமாக ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Advertisement

ஆனால் எதிர்பார்ப்புகளை ரியான் பராக் பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு இடம் கிடைத்தது.

Advertisement

இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் ரியான் பராக் வெளுத்து கட்டி வருகிறார். ஏற்கனவே சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, மறுமுனையில் ஒற்றை ஆளாக நின்று ரியான் பராக் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 87 பந்துகளில் 12 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 155 ரன்களை விளாசினார். தற்போது அசாம் அணி தனது 2ஆவது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி சச்சின் பேபியின் அபார சதத்தால் 419 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அசாம் அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களமிறங்கிய ரியான் பராக் பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்து கொண்டார். அதிரடியாக விளையாடிய அவர் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 125 பந்துகளில் 3 சிக்ஸ், 16 ஃபோர்ஸ் உட்பட 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் அசாம் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்தடுத்து போட்டிகளில் ரியான் பராக் சதம் விளாசி இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News