கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!

Updated: Mon, Aug 07 2023 21:59 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இறுதி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் வலிமையான முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் தொடர்ந்து இரு தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அணியில் யாருக்கு என்ன இடம் என்பதை தெரியாமல் இருப்பதும், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தான். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்த டி20 தொடரில் பந்துவீச்சு பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான திட்டங்களோடு இருக்கிறார்கள்.

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனாலும் அடுத்து வந்த பூரன் அதைப்பற்றி எந்தவித கவலையும் படாமல் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க முதல் மூன்று ஓவர்களில் முயற்சியை செய்யவில்லை. இதற்கடுத்து விக்கெட் விழும் பொழுது, அதை பொருட்படுத்தாமல் ரன் வேகத்தை அதிகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா “ஆமாம் உண்மைதான். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. இது இந்தியா தவறவிட்ட ஒரு தந்திரம் என்று நான் நினைக்கிறேன். இது நிச்சயமாக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை மாதிரியான போட்டிகளில் எதிரொலிக்கும். நாங்கள் உலகில் நடத்தப்படும் எந்த ஒரு டி20 லீக்குகளிலும் விளையாடுவது கிடையாது. ஐபிஎல் தொடரை ஒரு அமைப்பாக பாதுகாப்பது தவறு கிடையாது. 

ஆனால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நம்மால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் மிகச் சிறப்பாக செயல்பட முடியாது. இந்திய பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மற்ற நாட்டு வீரர்கள் இருநாட்டு தொடர்களிலோ அல்லது ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களிலோ விளையாடும் பொழுது, அவர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடி இருப்பது பெரிய அளவில் உதவி செய்கிறது. ஏனென்றால் இந்திய பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் அடுத்து என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு மிக தெளிவாக தெரிந்து இருக்கிறது.

மேலும் சஹால் ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை திரும்ப ஓவர் வீச கொண்டு வராமல், அவரை அத்தோடு முடித்துக் கொள்வது என்பதை என்னால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. சஹாலுக்கு இருக்கும் தரம் மற்றும் அனுபவத்திற்கு, கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்று மிக நன்றாகவே தெரியும். இந்த இடத்தில் நேற்று பெரிய தவறை செய்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை