ENG vs IND: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!

Updated: Mon, Jul 18 2022 12:03 IST
Rohit Sharma Pleased With England Series Win but Wants Team to Improve Further (Image Source: Google)

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 45.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு டாப்லி வில்லனாக உருவெடுத்தார். முதல் விக்கெட்டாக ஷிகர் தவானை ஒரு ரன்னில் அவுட் ஆக்கியவர், அடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியையும் 17 ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக தொடங்கினாலும், 16 ரன்களில் அவுட் ஆனார்.

இதன்பின்தான் இந்திய அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த்  இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டனர். ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் கூட்டணி 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. பின்னர் அதிரடி காட்ட தொடங்கிய பந்த் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடிய பண்ட் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லே வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் விரட்டினார் பந்த் . இறுதியில் இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ரிஷப் பந்த் , 113 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார்.  இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பந்தும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியாவும் கைப்பற்றினர்.

ஆட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, “இது ஒரு நல்ல ஆடுகளம். ஆனால் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்த வெற்றி எளிதாக கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மிடில் ஓவர்களில் அதிகம் பேட்டிங் செய்யாத ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் அருமையாக விளையாடினார்கள்.  எந்த நேரத்திலும் அவர்கள் பீதியடைந்ததாக நாங்கள் உணரவில்லை. அவர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர்.

அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது மிக முக்கிய நபராக மாறி உள்ளார். அதே வேளையில் ஹார்டிக் பாண்டியாவும் தற்போது பந்து வீச்சில் தனது அசத்தலான செயல்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார், ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்கும் எங்களது வீக்னஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனாலும் ஒரு தரமான அணி எப்படி வெற்றியை பெறும் என்பதை இந்திய அணி செய்து காண்பித்துள்ளது. இது நம்முடைய பலம் தான். இந்திய அணியில் தற்போது உள்ள இந்த பலத்தின் அடிப்படடையில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அதன்படி இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை