ENG vs IND, 2nd ODI: இந்திய அணியின் தோல்வி குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!

Updated: Fri, Jul 15 2022 11:37 IST
Rohit Sharma wants India to be more positive in tricky chases (Image Source: Google)

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக மொயின் அலி 47 ரன்களையும், டேவிட் வில்லி 41 ரன்களும் அடித்தனர்.

அதனை தொடர்ந்து 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற நிலையில் சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் இந்த போட்டியின் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே பந்து வீசினோம். ஆனாலும் மிடில் ஆர்டரில் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனால் இங்கிலாந்து அணி ஒரு நல்ல இலக்கை நிர்ணயித்தது.

ஆனாலும் இந்த டார்கெட் என்பது சேசிங் செய்ய முடியாத அளவுக்கு கடினமான ஒன்று எல்லாம் கிடையாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை அதுதான் தோல்விக்கு காரணம். அது மட்டுமின்றி இந்த போட்டியில் நிறைய கேட்ச்களை நாங்கள் பிடித்திருக்க வேண்டும் இந்த ஒரு தவறை மீண்டும் மீண்டும் இந்திய அணி செய்து வருகிறது. அதை பற்றி அதிகம் நாம் பேசியிருக்கிறோம். ஆனால் அதே தவறு மீண்டும் மீண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேட்ச்களை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் பேட்டிங்கில் ஒரு வீரர் இறுதி வரை நின்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அதனை டாப் ஆர்டரில் இருக்கும் ஒரு வீரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். அடுத்து மான்செஸ்டரில் நடக்கும் இறுதி போட்டிக்கான முடிவை காண ஆவலாக உள்ளோம். நிச்சயம் அங்குள்ள மைதானத்தின் தன்மைக்கேற்ப நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை அங்கு வெளிப்படுத்துவோம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை