SA vs IND, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 202 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 60 ரன்கள் எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் தனது பங்கிற்கு ஒரு சிக்சருடன் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 100 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவும் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தர்ப்பில் கேசவ் மகாராஜ், லிசாத் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பர்கர், ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.