அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்!

Updated: Mon, Jan 01 2024 18:36 IST
அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வேளையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க மோசமான பந்துவீச்சே காரணம் என்பதனால் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ரவீந்திர ஜடேஜா பின்வரிசையில் ரன் குவிப்பிற்கு கை கொடுப்பார். அதோடு பவுலிங்கிலும் அவரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும். மேலும் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாரை கொண்டு வர வேண்டும். 

ஏனெனில் பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியின் போது மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசினால் ரோஹித் அவரை அணியில் நீடிக்க வைக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து மைதானத்தின் தன்மையை கணிக்காமல் இருந்தால் நிச்சயம் முகேஷ் குமாரை இரண்டாவது போட்டியில் இணைத்து விளையாட வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை