எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்!

Updated: Sun, Jan 28 2024 22:32 IST
எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 6 ரன்களி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 6 ரன்களிலும், ஜேஜே ஸ்மட்ஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரீட்ஸ்கி - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.  இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய மேத்யூ பிரீட்ஸ்கி 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களைச் சேர்த்திருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.  இதையடுத்து களமிறங்கிய ஹென்றிச் கிளாசென் ஒருபக்கம் சிக்சர்களாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் இருந்த வியான் முல்டர் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்றிச் கிளாசென் 16 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 50 ரன்களைச் சேர்த்து மிரட்டினார்.

இதனால் எஸ்ஏ 20 லீக் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஒபேத் மெக்காய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 6 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் 14 ரன்களுக்கும், விஹான் லூக் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 3, ஆண்டில் பெஹ்லுக்வாயோ 0, ஃபேபியன் ஆலன் 2, ஃபோர்டுயின் 2, லுங்கி இங்கிடி ஒரு ரன்னிலும், ஒபெத் மெக்காய் 7 ரன்களுக்கும், தப்ரைஸ் ஷம்ஸி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பியூரன் 36 ரன்களைச் சேர்த்தது. 

இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 13.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நூர் ரஹ்மத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை