எஸ்ஏ20 2024: எம்ஐ கேப்டவுனை வீழ்த்தி பதிலடி கொடுத்தது பார்ல் ராயல்ஸ்!

Updated: Mon, Jan 22 2024 12:01 IST
எஸ்ஏ20 2024: எம்ஐ கேப்டவுனை வீழ்த்தி பதிலடி கொடுத்தது பார்ல் ராயல்ஸ்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், கேப்டவுன் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 69 ரன்களை எடுத்திருந்த ஜேன் ராய் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களை எடுத்திருந்த ஜோஸ் பட்லரும் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஃபாபியன் ஆலனும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, கேப்டன் டேவிட் மில்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா 2 விக்கெட்டுகளையும், தாமஸ் கேபர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரஸ்ஸி வேண்டர் டுசென், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ஃபோர்டுயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் கேப்டவுன் அணி 13 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த எஸ்டெர்ஹூய்சன் -சாம் கரண் இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். ஆனால் அவர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளித்து விளையாடமுடியாமல்  எஸ்டெர்ஹூய்சன் 32 ரன்களுக்கும், சாம் கரண் 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணி வீரர்களும் சோபிக்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் 18.2 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் ஃபோர்டுயின் 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, ஒபேத் மெக்காய், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை