எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் நடைபெறவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகள் தயாராகி வருகின்றன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த, விடுவித்த மற்றும் ஏலத்திற்கு முன்னதாக வாங்கிய வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இத்தொடரின் லீக் சுற்றானது ஜனவரி 9 முதல், பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலும், முதலாவது தகுதி சுற்று ஆட்டம் பிப்ரவரி 4ஆம் தேதியும், எலிமினேட்டர் சுற்று ஆட்டம் பிப்ரவரி 5ஆம் தேதியும், 2ஆவது தகுதி சுற்று ஆட்டம் பிப்ரவரி 6ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து இந்தாண்டு எஸ்ஏ 20 தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 8ஆம் தேதி ஜஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டிகான ரிஸர்வ் டேவாக பிப்ரவரி 9ஆம் தேதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமானது அறிவித்துள்ளது.