தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!

Updated: Wed, Nov 15 2023 18:56 IST
தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 397/4 ரன்கள் சேர்த்தது.  இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 47, ஷுப்மன் கில் 79* என தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அவர்களை விட மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தனர். அதில் விராட் கோலி 117 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 (70) ரன்களும் அடித்தனர். இறுதியில் கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு 39* ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 3 விக்கெட்களை சாய்த்தார்.

முன்னதாக இந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை (49 சதங்கள்) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அது போக இந்த உலகக் கோப்பையில் 711 ரன்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (2003இல் 673 ரன்கள்) வாழ்நாள் உலக சாதனையையும் தகர்த்தார்.

இப்படி தம்முடைய குருவின் சாதனைகளை உடைத்த விராட் கோலி சதத்தை கொண்டாடிய போது தலைவணங்கிய நிலையில் பெவிலியனிலிருந்த சச்சின் டெண்டுல்கர் கைதட்டி பாராட்டினார். அத்துடன் இன்னிங்ஸ் முடிந்ததும் கட்டிப்பிடித்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “முதல் முறையாக இந்திய உடைமாற்றும் அறையில் பார்த்த போது சக அணி வீரர்கள் உங்களை என்னுடைய காலில் விழுந்து தொட சொன்னார்கள்.  அன்றைய நாளில் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

ஆனால் விரைவாக நீங்கள் உங்களுடைய திறமை மற்றும் ஆர்வத்தால் என்னுடைய நெஞ்சை தொட்டீர்கள். ஒரு இளம் பையனாக இருந்து இன்று நீங்கள் விராட் எனும் வீரராக வளர்ந்துள்ளதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த சாதனையை ஒரு இந்தியரை தவிர்த்து வேறு ஒருவர் உடைத்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டேன். அதுவும் உலககோப்பை செமி ஃபைனல் போன்ற மிகப்பெரிய இடத்தில் என்னுடைய சொந்த ஊரில் இருக்கும் மைதானத்தில் நீங்கள் அதை உடைத்தது அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அமைந்தது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை