தீப்தி சர்மா விதிகளை மீறி எதையும் செய்யவில்லை - சச்சின் டெண்டுல்கர்!

Updated: Thu, Oct 20 2022 14:47 IST
Sachin Tendulkar on Deepti Sharma run-out controversy (Image Source: Google)

கடந்த மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த அணி வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையாக நிலவுகிறது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இவ்வகையான அவுட் ஒருமுறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து பிரபலமாகி அவரது பெயரோடு அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. 

ஏனெனில் தனது பார்ட்னர் பேட்ஸ்மேனை பார்த்துக்கொண்டே பெரும்பாலான சமயங்களில் தங்களை அறியாமல் வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர் பந்து வீசுவதற்கு முன்பாகவே கோட்டை விட்டு வெளியேறுவார்கள். அப்போது கவனம் பந்து வீச்சாளர் மேல் இல்லாமல் எதிர்ப்புறம் இருப்பதால் பவுலர் ரன் அவுட் செய்வதை அனைவரும் நேர்மைக்குப் புறம்பானதாக பார்க்கிறார்கள். ஆனால் நியாயப்படி பவுலர் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அப்படி ஒரு விதிமுறை இல்லாதது போல் முன்கூட்டியே வெளியேறி ரன் எடுப்பதற்கான சாதகத்தை உருவாக்கிக் கொள்வதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதினார்.

அதை களத்திலும் பின்பற்றிய அவர் 2019 ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார். அதற்காக உலகமே திட்டி தீர்த்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்டதாக தனது கருத்தில் விடாப்பிடியாக நின்ற அஸ்வின் உலக அளவில் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். அவரது தொடர்ச்சியான கோரிக்கையில் நியாயமிருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. அதை ஐசிசியும் ஏற்றுக்கொண்ட நிலையில் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக ஒட்டுமொத்த இங்கிலாந்தினரும் சேர்ந்து திட்டி தீர்த்தார்கள்.

அதற்கு அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை காட்டி தோற்காத நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலக கோப்பை வென்றதை விட தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடக்கவில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். ஆனால் சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த அவுட்டை தடை செய்து அதற்கு பதிலாக எச்சரிக்கையும் மீறும் பேட்ஸ்மேன்களுக்கு பெனால்டி ரன்களும் கொடுக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டுமென ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயின் அலி, ஜோஸ் பட்லர் போன்ற இங்கிலாந்தினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டையும் அதற்காக வரையறைக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்டு விளையாடுவதே நேர்மையுடன் விளையாடுவதற்கான அர்த்தமென்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தீப்தி சர்மா விதிமுறையையும் நேர்மையையும் பின்பற்றியதாக தெரிவிக்கும் அவர் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறையை பின்பற்றி நடப்பதே நேர்மையுடன் விளையாடுவதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தீப்தி சர்மா விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விளையாடினார். கிரிக்கெட்டின் நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவெனில் நீங்கள் எதை விளையாடினாலும் அது விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட்டின் நேர்மையாகும். தற்போது அது (மன்கட்) விதிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் வெள்ளை கோட்டை தொடுவதற்கு கொஞ்சம் தவறினாலோ அல்லது தவற விட்டாலோ நீங்கள் அவுட் கொடுப்பீர்கள் சரி தானே?

அதே போல் ஒரு பேட்ஸ்மேன் பந்தை தவற விடும் போது பந்து லைனில் சென்று ஸ்டம்ப்பை அடித்தால் அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப் படுகிறார். எனவே தற்போது ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த விதிமுறைப்படி பந்து வீசுவதற்கு முன்பாக நீங்கள் வெளியேறினால் நீங்கள் அவுட், அவ்வளவு தான்” என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை