என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!

Updated: Sat, Aug 10 2024 21:44 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன. 

அதிலும் குறிப்பாக இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனால் இந்திய அணி தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், சதமடித்த பிறகும் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணியில் இருந்து ஓரங்கட்டுவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். 

இந்நிலையில் சமீபத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், நீங்கள் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த பிறகும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் டி20அணியிலும், டி20 உலகக்கோப்பை சமயத்தில் ஒருநாள் அணியிலும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் இது விவாதமாக மாறிவரும் நிலையில், அணி தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.  

இதற்கு பதிலளித்துள்ள சஞ்சு சாம்சன், “அவர்கள் என்னை விளையாட அழைத்தால், நான் சென்று விளையாடுவேன். இல்லை என்றால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன். மேற்கொண்டு அதுபற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. இந்திய அணி தற்போது நன்றாக விளையாடி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன் மற்றும் என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். அது எனது விளையாட்டை மேம்படுத்த உதவிவருகிறது. எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும், அதனால் நான் எனது விளையாட்டை மேம்படுத்துவதிலும், என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதிலும் தற்சமயம் ஆர்வம் காட்டிவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை