இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளது - ரோஹித் சர்மா!

Updated: Wed, Feb 23 2022 14:24 IST
Image Source: Google

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தில் விளையாடியபோது சூர்யகுமார் யாதவுக்கும் தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்கள். 

இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, “சஞ்சு சாம்சனிடம் அபாரமான திறமை உள்ளது. ஐபிஎல்-லில் அவருடைய சில ஆட்டங்கள் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. வெற்றியடைவதற்கான திறமைகள் அவரிடம் உள்ளன. பலரிடமும் திறமை உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். 

தன்னுடைய திறமையை எப்படிப் பயன்படுத்தப் போகிறார், எப்படி அதிகப்படுத்தப் போகிறார் என்பது சஞ்சு சாம்சனின் கையில் தான் உள்ளது. அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளதாக அணி நிர்வாகம் பார்க்கிறது. எங்களிடம் விளையாடும்போது அவருக்கு நம்பிக்கையைத் தருவோம். உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் அவருடைய பெயரும் பரிசீலனையில் உள்ளது. 

அதனால் தான் அணியில் இடம்பிடித்துள்ளார். பேக்ஃபுட் ஷாட், பிக் அப் புல், கட் ஷாட் என அவரிடம் அபாரமான பேட்டிங் திறமை உள்ளது. பந்துவீச்சாளருக்கு மேலே ஷாட் அடிப்பார், அதெல்லாம் அடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆஸ்திரேலியாவில் அதுபோன்ற ஷாட்கள் அவசியம். சஞ்சு சாம்சனிடம் அவ்வகை ஷாட்கள் உள்ளன. அவர் தன் திறமையை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை