இரானி கோப்பை 2024: இரட்டை சதம் விளாசிய சர்ஃப்ராஸ்; வலிமையான நிலையில் மும்பை அணி!

Updated: Wed, Oct 02 2024 20:10 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்ந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 15ஆவது சததைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷம்ஸ் முலானி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனுஷ் கோட்டியானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசததை பதிவுசெய்த கையோடு 64 ரன்களில் விக்கெட்டை இஅந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மஹித் அவஸ்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷர்துல் தக்கூரும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனாலும் மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய சர்ஃப்ராஸ் கான் தனது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 539 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 221 ரன்களுடன் களத்தில் உள்ளார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை