கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!

Updated: Fri, Feb 16 2024 11:33 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில்  நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.

இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார். 

ஆனால் அதற்குள் மார்க் வுட் நேரடியை பந்தை ஸ்டம்பில் அடிக்க சர்ஃப்ராஸ் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கானை ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சுயநலத்தினால் ரன் அவுட் செய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இதனை பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தார். 

இதையடுத்து, சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைராலாகி வருகிறது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன். சிறப்பாக விளையாடினீர்கள் சர்பராஸ் கான்" என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இப்போட்டியில் 62 ரன்கள் அடிக்க முக்கிய ஆலோசனை தெரிவித்த ஜடேஜாவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்று சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் நான்கு மணி நேரமாக பேடை கட்டிக்கொண்டு பேட்டிங் செய்வதற்காக காத்திருந்தேன். எவ்வளவோ காத்திருந்துவிட்டோம் இன்னும் சில மணி நேரம்தானே என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். பேட்டிங் விளையாடும் போது என்னிடம் பேசிக்கொண்டே இருங்கள் என நான் ஜடேஜாவிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் எனக்கு களத்தில் தேவையான அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.

ஆனால் களத்தில் வீரர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் எழுவது கிரிக்கெட்டில் வழக்கம்தான். அதன்மூலம் சில சமயங்களில் ரன் அவுட்கள் நிகழலாம். கிரிக்கெட்டில் இதுவும் கூட ஒரு பகுதிதான். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை கூறினார். அதற்கு அவருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை