இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப் பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவிப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் 20,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வந்த அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார். 

Advertisement

அந்த நிலையில் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் அதன்பின் ஃபார்மை இழந்த அவர் இடையிடையே 30, 50 போன்ற ரன்களை எடுத்தாலும் அனைவரும் அவரை ஃபார்ம் அவுட் என்றே கருதுகின்றனர்.

Advertisement

அந்தளவுக்கு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக அழுத்தமான கேப்டன்ஷிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடும் தொடங்கிய  போதிலும் ஐபிஎல் 2022 தொடரில் 3 முறை கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாது உட்பட முன்பை விட சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் எப்போது சதமடிப்பார் என்று பேசியவர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கி விட்டார்கள். குறிப்பாக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எவ்வளவு நாட்கள் ரன்கள் அடிக்காமல் விளையாடுவீர்கள் என்று ஜாம்பவான் கபில் தேவ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இருப்பினும் 70 சதங்களை அடிப்பது அவ்வளவு சிறிய விஷயமல்ல என்பதால் கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான் போன்ற வெளிநாட்டவர்கள் முழுமையான ஆதரவளித்து வருகின்றனர். அதே போல் சோயப் அக்தர், பாபர் அசாம் போன்ற பரம எதிரியான பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள், இந்நாள் வீரர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விமர்சனத்தில் தவிக்கும் விராட் கோலிக்கு முழுமையான ஆதரவை கொடுத்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இணைய பக்கத்தில் பேசிய அவர், “விராட் கோலியை இந்திய அணி டி20 உலக கோப்பையில் தொடரவேண்டும், அவரிடம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை இன்னும் உள்ளது. எதிரணியில் ஒரு கேப்டனாக அல்லது வீரராக நான் இருந்தால் நிச்சயம் விராட் கோலி இல்லாத அணியை விட அவர் இருக்கும் அணியை கண்டு சற்று பயப்படுவேன். இந்த கடினமான தருணத்தில் அவர் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வரலாற்றில் பேட்ஸ்மன் அல்லது பவுலர் என யாராக இருந்தாலும் இது போன்ற கடினமான தருணங்களை சந்தித்துள்ளார்கள். சிறந்த வீரர்கள் அதிலிருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதை விராட் கோலி செய்வதற்கு சற்று நேரமாகும்

உலக கோப்பையில் விராட் கோலியை விட்டுவிட்டு அவரின் இடத்தில் நீங்கள் யாரையாவது தேர்வு செய்து அவர் சிறப்பாக செயல்பட்டால் பின்பு விராட் கோலி மீண்டும் அணிக்குள் வருவது கடினமாகிவிடும். ஒருவேளை இந்திய அணியில் நான் இருந்தால் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன். ஏனெனில் எனக்கு அந்த தலைகீழ் நிலைமை தெரியும். அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக ஆதரவை கொடுத்து தன்னம்பிக்கை ஏற்படுத்துவதே இந்த சமயத்தில் அனைத்தையும் விட சிறந்த அணுகுமுறையாகும்.

Advertisement

ஒரு கேப்டனாக அல்லது ஒரு பயிற்சியாளராக நான் இருந்தால் முதலில் அவருக்கு முடிந்தளவு சுதந்திரத்தைக் கொடுத்து விமர்சனங்கள் இல்லாமல் அவரின் வாழ்க்கையை எளிதாக்கி கச்சிதமாக இருக்கும் நிலைமையை ஏற்படுத்துவேன். அதை செய்து மீண்டும் அவர் ரன்கள் அடிப்பதற்காக காத்திருங்கள். உலக கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தால் கடைசி கட்டத்தில் விராட் கோலியின் சிறந்த செயல்பாடுகளை பார்க்க முடியும் என்று நம்பலாம்.

தொடரின் துவக்கத்தில் கணிசமான ரன்களை அடித்தால் அதுவே உங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதேபோல் எப்போதுமே ஒரு அணி ஒருவரை நம்பி இருக்காது என்பதால் அவரை தவிர்த்து எஞ்சிய வீரர்களும் தரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் விராட் கோலியை ஃபார்முக்கு கொண்டுவர புதிய வழிமுறைகளை கடைபிடித்து உதவ வேண்டும். அதற்காக அவரை பேட்டிங் வரிசையில் மேலே உயர்த்தினால் அவரது இடத்தில் விளையாடுவதற்கு ஒருவரை தேட வேண்டும்.

மேலும் சமீப காலங்களில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் பெரும்பாலும் ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக 3ஆவது இடத்திலும் பேட்டிங் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் வரிசையை மாற்றுவது அவர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி பதற்றமடைய வைக்கும். எனவே இதுதான் உங்களது இடம் இதில் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். உங்கள் மீது தன்னம்பிக்கை வைத்து கடினமாக உழைப்பதுடன் ஏற்கனவே சிறந்த வீரராக நீங்கள் வருவதற்கு என்ன செய்தோம் என்பதை யோசித்து மீண்டும் செய்தால் ரன்கள் தாமாக வரும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News