ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் ஸ்ரேயாஸ் & ஜார்ஜியா!
கடந்த மாதம் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இதில் நடந்து முடிந்த சாம்பியன் ஸ்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ரன்களைக் குவித்ததுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.
மேற்கொண்டு நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்ததன் காரணமாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஜேக்கப் டஃபி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மார்ச் மாதத்திற்கான ஐசிசி விருதினை வென்றுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீராங்கனை ஜார்ஜியா வோல் மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது