வீக்னஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்; கொந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Fri, Nov 03 2023 12:32 IST
வீக்னஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்; கொந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)

ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஷார்ட் பந்துகளை அடிக்க முயற்சி செய்து தன் விக்கெட்டை பறி கொடுத்து வந்தார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அதே போல் விளையாடிய 4 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு பயிற்சி அளித்தார். 

நிறைய ஷார்ட் பந்துகளை சந்தித்து ஸ்ரேயாஸ் வலைப் பயிற்சி மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் டிராவிட் தானே முன்வந்து த்ரோடவுன் பயிற்சியை அவருக்கு வழங்கினார். இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக ஷார்ட் பந்துகளை சமாளித்து, அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். 

போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்ற போது, அவரிடம் "அடுத்து தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா ஆட உள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிக ஷார்ட் பந்துகளை வீசுவார்களே. அதை எப்படி எதிர்கொள்ள தயாராகி இருக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார் ஒருவர். அதைக் கேட்ட உடன் ஸ்ரேயாஸ் ஐயர், "அது பிரச்சனை என்று கூறுகிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?' என திருப்பி கேட்டார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர், "நான் பிரச்சனை என சொல்லவில்லை. ஆனால்ம் ஷார்ட் பந்துகள் உங்களுக்கு தொந்தரவாக உள்ளது" என்றார்.

அதற்கு, "எனக்கு தொந்தரவா? நான் எத்தனை புல் ஷாட்களை விளையாடியிருக்கிறேன் பார்த்தீர்களா? இந்த கருத்து உங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. என் மனதில், ஷார்ட் பந்துக்கு எதிராக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் ஒரு பந்தை அடிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது ஷார்ட் பந்தாக இருந்தாலும் அல்லது ஓவர் பிட்ச் ஆக இருந்தாலும் நீங்கள் அவுட் ஆகி வெளியேறும் வாய்ப்பு ஏற்படும்.

 

நான் இரண்டு அல்லது மூன்று முறை பவுல்டு அவுட் ஆனால், நீங்கள் அனைவரும், "சரி, அவரால் இனி ஸ்விங்கிங் பந்து விளையாட முடியாது. ஒரு பந்து சீமிங் ஆகிறது என்றால் அவரால் கட் ஷாட் ஆட முடியாது என கூறுவீர்கள். எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது, என் திறமைகள் மற்றும் நான் எவ்வளவு விளையாடி இருக்கிறேன் என எனக்கு தெரியும். சில டெலிவரிகளை விளையாடும் அளவுக்கு அனுபவம் பெற்றுள்ளேன். 

மேலும் நான் மீண்டும் மீண்டும் அவுட் ஆகலாம், ஆனால் நேர்மையாகச் சொல்வதென்றால், என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும் வரை மற்றும் எனது அணியினர் என்னை நம்பி என்னை ஆதரிக்கும் வரை அது குறித்து நான் கவலைப்படவில்லை. அதுவே எனக்கு ஊக்கமளிக்கும் விஷயம். நான் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை" என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை