இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் ஆறு ஓவர்களிலேயே இலங்கை அணி 55 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்காவின் விக்கெட்டை அஸ்மதுல்லா ஒமார்சாய் கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் ஃபசல்ஹக் ஃபரூக்கு பந்துவீச்சில் நூர் அஹ்மதிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் இணைந்த தனஞ்செயா டி சில்வா - சதீரா சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சமரவிக்ரமா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் தனஞ்செயா டி சில்வா 11 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் வநிந்து ஹசரங்கா 22 ரன்களிலும் என அடுத்தடுத்து முகமது நபி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து சமரவிக்ரமாவுடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீரா சமரவிக்ரமா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதீரா தனது விக்கெட்டை இழந்தார். 

ஆனால் மறுபக்கம் ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News