இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இலக்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரடண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று கலேவில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்து களமிறங்கியது. இதில் டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 109 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் அலெக்ஸ் கேரி 28 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 145 ரன்களைச் சேர்த்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் திமுத் கருணரத்னே - குசால் மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கருணரத்னே ஆட்டமிழந்தார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களுடனும், ஆஞ்சலோ மேத்யூஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.