இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களான மினோத் பானுகா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இதில் பானுகா 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்ஷ ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 118 ரன்களில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 44 ரன்களில் தனஞ்செயவும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா நிதானமாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைச் சேர்த்தது.
இலங்கை அணி தரப்பில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 118 ரன்களையும், சரித் அசலங்கா 71 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.