SL vs WI, 1st ODI: அசலங்கா, மதுஷ்கா அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

Updated: Sun, Oct 20 2024 23:13 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்பாடி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - பிராண்டான் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான அலிக் அதானாஸும் 10 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த கேப்டன் ஷாய் ஹோப்பும் 5 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேசி கார்டி மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த ரூதர்ஃபோர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 38.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அச்சமயத்தில் களத்தில் இருந்த ரூதர்ஃபோர்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ஜெஃப்ரி வண்டர்சே, சரித் அசலங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதன்பின்னரும் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸ் அத்துட முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இலங்கை அணிக்கு இப்போட்டியில் 37 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 13 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 18 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான நிஷான் மதுஷ்காவுடன் இணைந்த கெப்டன் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 69 ரன்களை எடுத்திருந்த நிஷான் மதுஷ்கா தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சரித் அசலங்கா 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே மற்றும் கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியானகே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 31.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை