சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana World Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் குவித்த உலகின் இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல்வும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யவும் முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
4000 டி20 சர்வதேச ரன்கள்
இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா மேற்கொண்டு 58 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 4ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். அவர் இதுவரை விளையாடிய 151 டி20 சர்வதேச போட்டிகளில் 145 இன்னிங்ஸ்களில் மந்தனா 3942 ரன்கள் எடுத்துள்ளார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை மற்றும் உலகின் ஐந்தாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
இதற்கு முன் மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.அவர் 174 இன்னிங்ஸ்களில் 4716 ரன்களைப் பதிவுசெய்துள்ளார். அதேசமயம் ஒட்டுமொத்தமாக சர்வதேச் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் ஆகியோர் மட்டுமே 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
தற்போதைய டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனாவின் செயல்திறன் சிறப்பாக இருந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா ஒரு அரைசதம், ஒரு சதம் என 60.33 என்ற சராசரியுடன் 181 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இந்தத் தொடரின் போது, மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.