பேட்டிங்கில் சோபிக்க தவறியதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள் அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரை சதம் கடந்ததுடன் 59 ரன்களையும், அணியின் நட்சத்திர வீரர்கள் ரியான் ரிக்கல்டன் 41 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும், நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 89 ரன்களையும், அபிஷேக் போரால் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரண் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் நாங்கள் தவறான ஷாட்டுகளை விளையாடி விக்கெட்டுகளை இழந்தோம். இந்தப் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அனைத்துப் போட்டிகளிலும் உங்களுடைய பின் வரிசை வீரர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடாது. அதனால் இதுகுறித்து அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்போட்டியில் நங்கள் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்தோம். மேற்கொண்டு பனியின் தாக்கம் இருந்ததன் காரணமாக பேட்டிங் செய்யவும் எளிதாக இருந்தது. இருப்பினும் எங்களால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. எங்கள் மூன்று ஸ்பின்னர்களில், இரண்டு பேர் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிற்ப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆட்டத்தை பேட்டிங் பார்வையில் இருந்து மறந்துவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
,