டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் உள்ளிட்ட இளம் வீரர்களும், ரவி சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் ரிசர்வ் வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. அதன்பின் 2011இல் ஒருநாள் உலக கோப்பை, 2013இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை தோனி வென்றுள்ளார்.
எனவே அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெகுவாக பயன்படும் என்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், பிசிசிஐயின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, “அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் விளையாடியுள்ள தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு வலுசேர்க்கும். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட தோனிக்கு எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.