இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கக் கோரும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு 2022 ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒருவழியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்த அவர் தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். முன்னதாக கடந்த 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்ட அவரது செயல்பாடுகளை பார்த்த எம்எஸ் தோனி கடந்த 2017இல் மொத்த கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடினார்.

Advertisement

பொதுவாகவே வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்களும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறி தாமாகவே ராஜினாமா செய்த கதைகள் உள்ளது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இரு மடங்கு அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி ஆக்ரோஷம் நிறைந்த கேப்டனாகவும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் எதிரணிகளை வெளுத்து வாங்கினார். அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக மிரட்டிய இந்தியா அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பதிவு செய்து வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டது.

Advertisement

ஆனாலும் உலக கோப்பையை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக விமர்சனங்களை சந்தித்த அவர் ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல தவறினார். அதனால் மறுபுறம் 5 கோப்பைகள் அசால்டாக வென்ற ரோஹித் சர்மாவை டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என அனைவருமே துடித்தனர். அந்த விமர்சனங்களால் முதல் முறையாக மனதளவில் சோர்வாகி ஃபார்மை இழக்க தொடங்கிய விராட் கோலி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அறிவித்தார்.

இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பிய அவர் தலைமையில் டி20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற காரணத்தைக் காட்டி அவருடைய ஒருநாள் கேப்டன் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த மொத்த அடுத்தடுத்த திருப்பங்களுக்கும் 2019இல் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.

அப்போது டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியை கேட்டுக்கொண்டதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால் தம்மிடம் யாரும் அவ்வாறு கேட்டுக் கொள்ளவில்லை என்று விராட் கோலி தெரிவித்தது இருவருக்குமிடையே விரிசலையும் கேப்டன்ஷிப் பிரச்சனையின் பின்புறத்தில் கங்குலி இருந்ததையும் அம்பலப்படுத்தியது. இந்நிலையில் விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி அடுத்தடுத்து பதவி விலகுவதற்கு சவுரவ் கங்குலியின் வருகையே காரணமென்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதீப் தெரிவித்துள்ளார்.

கங்குலியின் பின்புல செயல்பாடுகள் தான் விராட் கோலியின் ஃபார்ம் பறிபோக முதல் காரணமாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில்“அவர்கள் தோனியை உலகக் கோப்பைக்கு முன்பாக ஆலோசகராக நியமித்தனர். அதற்கு முன்பாக விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் பின்புறத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் நாம் குழம்பினோம். அதன்பின் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றது. அங்கு ரோஹித் சர்மா காயத்தால் வெளியேறியதால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

Advertisement

ஆனால் அங்கே திடீரென்று விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அந்த காலகட்டத்தில் பின்புலத்தில் நிறைய நடைபெற்றன. அதற்கு முன்பாக 2019 உலக கோப்பையில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். இருப்பினும் அங்கிருந்து தான் மாற்றங்களுக்கான சாவியை சவுரவ் கங்குலி கொடுக்க ஆரம்பித்தார் என்று நான் உணர்கிறேன். 

ரவி சாஸ்திரி வெளியேறியதும் ராகுல் டிராவிட் வந்தார், விக்ரம் ரத்தோர் அங்கேயே இருந்தார். எனவே பின்புறத்தில் ஏதோ ஒன்று நடைபெறுவது நன்றாக தெரிகிறது. அத்துடன் இந்த மாற்றங்கள் உச்ச கட்டத்தில் இருந்த ஒரு வீரரை மிகப்பெரிய பள்ளத்தாக்கில் வீழ்த்தியது” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News