அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சாரா ஃபோர்ப்ஸ், ஏனி ஹண்டர் ஆகியோர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அவர்களைத் தொடர்ந்து குல்டர் ரெய்லி 7 ரன்களிலும், கேப்டன் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 3 ரன்களுக்கும், ரெபேக்கா 8 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லியா பால் - அர்லீன் கெல்லி ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் லியா பால் 19 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஏவா கன்னிங் ஒரு ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அர்லீன் கெல்லி 35 ரன்களிலும், அலிஸ் டெக்டர் 17 ரன்களிலும், ஃப்ரேயா சார்ஜண்ட் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அயர்லாந்து அணியானது 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அச்சினி குலசூர்யா, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் இணைந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரமா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சமாரி அத்தபத்து 10 பவுண்டரிகளுடன் 48 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 23.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேற்கொண்டு இப்போட்டியின் ஆட்டநாயகி விருதை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து கைப்பற்றினார். அதேசமயம் தொடர் நாயகன் விருது அயர்லாந்து அணியின் அர்லீன் கெல்லிக்கு வழங்கப்பட்டது.