Emerging Asia Cup 2024: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

Updated: Fri, Oct 25 2024 22:01 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தன் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுப் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் முகமது ஹாரிஸ் 6 ரன்களுக்கும், காசிம் அக்ரம் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 14 ரன்களுக்கும், ஆஃப்ராத் மின்ஹாஸ் 10 ரன்களுக்கும், அப்துல் சமத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தாடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஒமைர் யூசுஃப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒமைர் யூசுஃபும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் துஷன் ஹெமந்தா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை ஏ அணிக்கு யசோதா லங்கா - லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யசோதா லங்கா 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் லஹிரு உதாராவுடன் இணைந்த அஹான் விக்கிரமசிங்காவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லஹிரு உதாரா 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நுவநிந்து ஃபெர்னாண்டோவும் 9 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஹான் விக்ரமசிங்கா அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும், சஹான் அராச்சிகே 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை ஏ அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஏ அணி இத்தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை