டி20 உலகக்கோப்பை: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். பானுகா ராஜபக்ச 7 ரன்னிலும், டாசன் ஷனகா 3 ரன்னிலும், ஹசரங்கா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ரனனுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 11 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய க்ளென் மேக்ஸ்வெல்லும் 12 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 22 ரனகளில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்க விட, மறுமுனையில் ஆரோன் ஃபிஞ்ச் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்துவந்தார்.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் கடந்து, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் யுவராஜ் சிங்கிற்கு பிறகு இரண்டாவது அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 18 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் என மொத்தம் 59 ரன்களுடனும், ஆரோன் ஃபிஞ்ச் 31 ரன்களையும் சேர்த்தனர்.