விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!

Updated: Sat, Mar 30 2024 14:07 IST
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனின் இரண்டாவது வெற்றியையும் பெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரைத் தவிர்த்து கேமரூன் க்ரீன் 33 ரன்களை எடுத்தார். 

இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 47 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், பில் சால்ட் 30 ரன்களையும் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களை எடுத்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்தித்ததற்கு காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் உள்பட சில முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்த போட்டியில் சக பேட்ஸ்மேன்கள் கை கொடுத்திருந்தால் விராட் கோலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “விராட் கோலி தனியாளாக எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். இப்போட்டியில் யாராவது ஒருவர் அவருக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இன்று யாராவது அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடி இருந்தால், விராட் கோலி இப்போட்டியில் 83 ரன்கள் அடித்தற்கு பதிலாக 120 ரன்கள் அடித்திருப்பார். கிரிக்கெட் என்பது தனிநபர் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் விளையாட்டு கிடையாது. இது ஒரு அணி விளையாட்டாகும். விராட் கோலிக்கு சக வீரர்களிடம் இருந்த எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அது தான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை