சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!

Updated: Mon, Nov 06 2023 12:11 IST
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். 35 வயதான நரைன் ஓய்வு குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நரைன் 2012ஆம் அண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகி அந்த அணி கோப்பை வெல்வதற்கு உதவியதுடன் அந்த தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு தனது அறிமுகத்தை சிறப்பாக தொடங்கிய நரைன் 2015ஆம் ஆண்டில் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசியதாக தடை விதிக்கப்பட்டார். பின்னர் 2016ஆம் ஆண்டில் மீண்டும் தடை நீக்கப்பட்டு போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வந்த நரைன் 2019க்கு பின் அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நரின் சர்வதேச போட்டிகளில் 165 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் சூப்பர் ஓவரை மெய்டனாக வீசிய ஒரே பவுலர் என்ற சாதனையை படைத்தவர்.

 

தன் ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை தான் எப்போது களத்துக்கு சென்றாலும் தன்னுடன் இருந்ததாகவும், அவரது ஆதரவுக்கு மிக்க நன்றி எனவும் கூறி உள்ளார். சில சமயம் தனது கிரிக்கெட் கனவு சரியா? இல்லையா? என குழம்பிய போது தந்தை தனக்கு சரியான பாதையை காட்டியதாகவும் கூறி இருக்கிறார் சுனில் நரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை