ஐபிஎல் 2025: புதிய சாதனை படைத்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் குயின்டன் டி காக் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சுனில் நரைன் - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் ரஹானே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய சுனில் நரைன் 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அஜிங்கியா ரஹானேவும் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சுனில் நரைன் 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் புதிய மைல் கல் ஒன்றையும் எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் சுனில் நரைன் மூன்று சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரின் தனது 100 சிக்ஸர்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு முன் இந்த தொடரில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஐபிஎல் தொடரில் 150+ விக்கெட்டுகள் மற்றும் 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார். அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 160 விக்கெட்டுகளையும், 107 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஐபிஎல்லில் தொடரில் சுனில் நரைன் 111 இன்னிங்ஸ்களில் 100 சிக்ஸர்களையும், 180 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.