இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று  போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.

Advertisement

மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. மேற்கொண்டு ஒருநாள் அணிக்கான கேப்டன் போட்டியில் ஷுப்மன் கில்லின் பெயரும் அடிபடுவதாக கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கையோடு அவர் நாடு திரும்புவார் என்றும், அதனால் ஒருநாள் அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என்றும் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டானாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி எதிர்வரவுள்ள 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வரை ஓரே கேப்டனின் தலைமையின் கீழ் இந்திய அணி டி20 கிரிக்கெட்டை எதிர்கொள்ளும் நோக்கில் அணியின் புதிய கேப்டனை நியமிக்க புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு ஹர்திக் பாண்டியா கடந்த சில காலங்களாகவே அடிக்கடி காயமடைந்து தொடரின் பாதியிலேயே வெளியேறி வருவதன் காரணமாகவும் இந்த முடிவானது எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏனெனில் கடந்த நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. அதன்பின் அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். மேற்கொண்டு நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் வெற்றிக்கும் பெரும் பங்காற்றினார். இதனால் ஹர்திக் பாண்டியா தான் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரையும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே கடும் போட்டி நிலவிவருவதாக கூறப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News