புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியானது கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களும், மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டிஎன்சிஏ லெவன் அணியானது 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணிக்கு 510 ரன்கள் என்ற இலக்கை டிஎன்சிஏ லெவன் அணி நிர்ணயித்திருந்தது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் வித்தியாசத்தியில் மும்பை அணியை வீழ்த்தியதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்ப்டி திருநெல்வேலியில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் மற்றும் ஹைதராபாத் அணிகளும், திண்டுக்கலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ லெவன் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் அவர்து கையில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களே வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்பதால், சூர்யகுமார் யாதவிற்கு இது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவரால் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாத பட்சத்தில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வும் கேள்விக்குறியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது