இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை முன்வைத்து டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “2007, செப்டம்பர் 24. பில்லியன் ரசிகர்களின் கனவு நிறைவேறிய நாள். அவ்வளவாக அனுபவம் இல்லாத, இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என யார் எண்ணியிருக்க முடியும்? அது நடந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதன்பிறகு நாம் பல வரலாறுகளைப் படைத்துவிட்டோம். தடுமாறினோம், இருந்தும் நம் ஆர்வத்தைத் தடை போடவில்லை. ஏனெனில் நாம் வெற்றியடைவோம் என எப்போதும் எண்ணி வந்தோம்.
இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நாம் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி மீண்டும் வரலாறு படைப்போம். நாங்கள் அதற்காக வந்துகொண்டிருக்கிறோம். இதை நிறைவேற்றுவோம். நான் தயார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.