ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மேக்ஸ் ஓடவுட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய விக்ரஜித் சிங் அதிரடியாக தொடங்கினாலும், 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாஸ் டி லீட் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 10 ரன்களிலும், தேஜா நிடமானுரு ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 48 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் - லோகன் வான் பீக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கினர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் பிரிங்கிளும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இறுதியில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களைச் சேர்த்திருந்த லோகன் வான் பீக்கும் விக்கெட்டை இழக்க, நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்ற்ன் ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News