T20 WC 2024, Super 8: சிக்ஸர் மழை பொழிந்த பட்லர்; அமெரிக்காவை பந்தாடி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

Updated: Sun, Jun 23 2024 22:41 IST
T20 WC 2024, Super 8: சிக்ஸர் மழை பொழிந்த பட்லர்; அமெரிக்காவை பந்தாடி முதல் அணியாக அரையிறுதிக்கு முன (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியானது அமெரிக்க அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் 8 ரன்களைச் சேர்த்திருந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 12 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டீவன் டெய்லரும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் இணைந்த நிதீஷ் குமார் மற்றும் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களிலும் என ஆதில் ரஷித் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர். 

பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய மிலிந்த் குமார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்மீத் சிங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்த தொடங்கியது. ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஹர்மீத் சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோரி ஆண்டர்சனும் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அலி கான், கெஞ்ஜிகே மற்றும் சௌரவ் நேத்ரவால்கர் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இதன்மூலம் அமெரிக்க அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸர்களை விளாசித்தள்ளிய கேப்டன் ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஹர்மீத் சிங்கின் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்ததுடன், பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணியானது 9.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியும் சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 83 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய பில் சால்ட் 25 ரன்களையும் சேர்த்து களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை