டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அந்த க்ரூப்பிலிருந்து 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.

Advertisement

எனவே வெற்றி கட்டாயத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் விளையாடவில்லை. அதனால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
  
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முந்தைய போட்டிகளில் ஏமாற்றமளித்த வார்னர் இந்த போட்டியில் நல்ல ஷாட்களை விளையாடினார். ஆனால் தேவையில்லாத ஒரு ஷாட்டுக்கு முயன்று 25 ரன்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஃப்கான் பவுலிங்கை அடித்து விளையாடிய மிட்செல் மார்ஷ் 30 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 25 ரன்களுக்கு வெளியேறினார்.

Advertisement

டி20 உலக கோப்பையில் மேக்ஸ்வெல்லின் பேட்டிங்  ஃபார்ம் கவலையளித்த நிலையில், இன்றைய முக்கியமான போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். 32 பந்தில் 54 ரன்கள் அடித்தார் மேக்ஸ்வெல். டெத் ஓவர்களில் மேக்ஸ்வெல்லுக்கு மறுமுனையில் ஆதரவு கிடைக்காததால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் உஸ்மான் கானி 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 30 ரன்களில் குர்பாஸ் ஆட்டமிழக்க, 26 ரன்களோடு ஸ்த்ரானும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய குலாபுதின் நைபும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், ரசூலி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களலமிறங்கிய ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

Advertisement

இதனால் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ரஷித் கான், அதில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஷித் கான் 23 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகள் என மொத்தம் 43 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது. மேலும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தனை 106 ரன்களுக்குள் சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் அணியின் நெட் ரன்ரேட்டை முந்தியிருக்கும். 

Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வெறும் 4 ரன்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், நாளை இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தினால் தான் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News