ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 12 சுற்றில் விளையாடும் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் ஒன்றில் இடம்பிடித்துள்ள இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - உஸ்மான் கானி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் குர்பாஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 27 ரன்களில் கானியும் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - நஜிபுல்லா ஸத்ரான் இணையும் அதிரடியில் மிரட்டினாலும், இப்ராஹிம் 22, நஜிபுல்லா 18 என அடுதடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குலாபுதின் நைபும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் முகமது நபி 13 ரன்கள் எடுத்த நிலையில் ரஜிதா பந்துவீச்சில் தசுன் ஷனகாவிடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ரஷித் கானும் 9 ரன்களில் வநிந்து ஹசரங்கா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.