ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே!

Updated: Wed, Jun 12 2024 13:14 IST
ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் என்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவ தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, “ஹர்திக் பாண்டியா எப்போதும் தனது திறமையில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது நான் உறுதியாக நம்பிய ஒன்று. சில நேரங்களில் உங்களுக்கு சிறப்பாக அமையாவிட்டாலும், நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் அது உங்களுக்கு சிறப்பான பலனை தரும். ஒரு பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறார். 

அனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் கேள்விக்குறியாக ஒன்றாக தான் இருந்தது. அது கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் அந்த கட்டத்தில் எதுவும் செய்திருக்க மாட்டார். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால், இந்திய அணிக்காக அவரது பணி நெறிமுறை முன்பு போலவே நடந்து கொண்டிருந்தது. அவர் நிறைய பயிற்சியை மேற்கொண்டிருப்பதால், அவரது பந்துவீச்சைப் பற்றி அவருக்கு நிறைய புரிதல் உள்ளது.

எனவே, அவர் தனது பயிற்சி மற்றும் நெறிமுறைகளை பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரைக் காட்டிலும், கடந்த சில போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக பந்துவீசிய விதத்தைப் பார்க்கும் போது ஒரு பந்துவீச்சாளராக அவர் தற்போது மேம்பட்டிருக்கிறார் என்பதை பார்க்கலாம். அதனால் நிச்சயம் அவர் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்கை வகிப்பார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை