இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், விராட் கோலி என அனைவரு சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுலின் சிறப்பான அட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு உயர்ந்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி அசத்தினார். அதுவரை அந்த ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷமரா புரூக்ஸ் - அகீல் ஹொசைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். இ
பின் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரூக்ஸ் 44 ரன்னிலும், அகீல் ஹொசைன் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம் 46 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.