இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 129 ரன்கள் எடுத்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து 292 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 18, ட்ராவிஸ் ஹெட் 0, மிட்சேல் மார்ஷ் 24, மார்னஸ் லபுஸ்ஷேன் 14, ஜோஸ் இங்லிஷ் 0, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்து ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியான போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார். 

Advertisement

குறிப்பாக கேப்டன் கமின்ஸ் சிங்கிள்களாக எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றியதை பயன்படுத்திய அவர் சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல காயத்தை சந்தித்தும் அசராத அவர் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 201 ரன்கள் விளாசி 46.5 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற வைத்தார். அவருடன் பட் கம்மின்ஸ் 12 ரன்கள் எடுத்ததால் ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன், ரஷித் கான், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

இந்நிலையில் இப்போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி தெரிவித்துள்ளார். அதன் பின் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடியதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசுகையில், “மிகவும் ஏமாற்றம். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. எங்களால் இதை நம்ப முடியவில்லை. எங்களுடைய பவுலர்களின் அசத்தலான ஆட்டத்தால் நல்ல தொடக்கத்தை பெற்றும் சில கேட்ச்களை தவற விட்டது தோல்வியை கொடுத்தது. அதன் பின் மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை. 

அவர் விளையாடிய ஷாட்டுகளுக்கு நான் பாராட்டுகளை கொடுக்கிறேன். எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு முயற்சித்தும் அவர் எவ்விதமான வாய்ப்பையும் கொடுக்கவில்லை. எங்களுடைய அணியின் நல்ல செயல்பாடுகளால் பெருமையடைந்தாலும் இத்தோல்வி ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் இதுவும் விளையாட்டின் ஒரு அங்கம் என்று நாங்கள் நினைக்கவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம். உலகக் கோப்பையில் ஆqப்கானிஸ்தானுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் சதமடித்த இப்ராஹிமுக்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News